Friday 30 November 2012

சைவத்தமிழ்

சைவம்

1. சைவ சமயம் என்றால் என்ன ?
சிவபெருமானை முழமுதற் கடவுளாக கொண்டு வழிப்படும் சமயம் .(சிவ சம்பந்த முடையது சைவம்).
2. சிவபெருமான் எப்படிபட்டவர் ?
சிவபெருமான் என்றும் உள்ளவர் ,எங்கும் நிறைந்தவர் ,எல்லாம் அறிபவர் , எல்லாம் வல்லவர் .
3. சிவபெருமான் உயிர்களுக்காக செய்யும் தொழில்கள் யாவை ?
1.படைத்தல்மாயையிலிருந்து உடல், கருவிகள், உலகம் ,நுகர்ச்சிபொருள்களைப் படைத்து உயிர்களுக்குக் கொடுத்தல்.
2.காத்தல்படைக்கபட்டதை உயிர்கள் அனுபவிக்க ஒருகால எல்லைவரைகாத்து நிறுத்தி வைத்தல்.
3.அழித்தல்உயிர்களுக்குக் களைப்பு நீங்கும் பொருட்டு படைத்தவைகளை மீண்டும் மாயையில் ஒடுக்குதல்.
4.மறைத்தல்உயிர்கள் பக்குவம் பெறுவதற்காக சிவபெருமான் தன்னை மறைத்து உலகத்தை காட்டல் .
5.அருளுதல்பக்குவம் அடைந்த உயிர்களுக்கு அருளை வழங்கி தன் திருவடியில் சேர்த்தல்.
4.சிவபெருமான் ஐந்தொழில்களையும் எதைக் கொண்டு செய்கிறார் ?
தம் சக்தியாகிய உமாதேவியாரை கொண்டு செய்கிறார்.
5. சிவபெருமானின் வடிவங்கள் எத்தனை வகை ?
1.அருவம்- கண்ணுக்கு புலனாகமல் சக்திருபமாய் இருந்து அருளல்(மந்திர ஒலி).
2.அருவுருவம்முகம் ,கை, கால் ,உறுப்புகள் இல்லாமல் தெரிவது(சிவலிங்கம்) .
3.உருவம்முகம் முதலிய உறுப்புகளுடன் தெளிவாக தோன்றுவது (25 மகேசுவரவடிவங்கள்).
6.சைவ சமய சாதனங்கள் எவை ?
திருநீறு , திருவைந்தெழத்து , உருத்திராக்கம் .
7. திருவைந்தெழத்து எத்தனை வகைப்படும் ?
. திருவைந்தெழத்து மூன்று வகைப்படும் .
1.தூல திருவைந்தெழத்துநமசிவாய .
2.சூக்கும திருவைந்தெழத்துசிவாய நம .
3.காரணதிருவைந்தெழத்துசிவயசிவ .
8. மணத்தால் செய்யும் வழிப்பாடுகள் யாவை ?
1.மானதசெபம் ,அகப்பூசை , திலாயம்
9.வாக்கால் செய்யு வழிப்பாடுகள் யாவை ?
திருமுறைகள் ஒதுதல், ஒதுவித்தல் , நாமவளிகூறல் ,வாசகசெபம்.
10.காயத்தால் செய்யும் வழிப்பாடுகள் யாவை ?
ஆலயம்வலம்வருதல் , திருப்பணிசெய்தல் , நந்தவனம்அமைத்தல் , மாலை தொடுத்தல் ,ஆலயத்தை கூட்டி மெழகிடுதல் முதலியன .
11.இறைவனை அடையும் மார்க்கங்கள் எவை?
1.தாச மார்கம்இறைவனுக்கு அடிமை பூண்டியற்றும் நெறியான இம்மார்கம் சரியை எனவும் கூறப்பெறும்.
2.சற்புத்திர மார்கம்மகன் மைநெறி எனக் கூறப்படும் இம்மார்க்கம் கிரியை நெறியாகும் .
3.சகமார்க்கம்தோழமை நெறிஎனப் பெறும் இம்மார்க்கம் யோகநெறி பாற்பட்டதாகும் .
4.சன்மார்கம்ஞானநெறி எனப் பெறும் இம்மார்கம் குருசிஷ்ய பாவத்தை உணர்த்துவது .
12.குரு , லிங்க , சங்கம வழிபாடு என்றால் என்ன ?
சிவபெருமான் திருவடி நீழலைச் சென்றடைவதற்குரிய பல மார்க்கங்களில் குரு லிங்க சங்கம வழிப்பாட்டு நெறிகளும் குறிப்பிடத்தக்கனவாகும் .
1.குரு வழிப்பாடுகுருவை தரிசித்தலும் , குருவின் திருநாமத்தைச் செப்புதலும் , உபதேசத்தை கேட்டலும் , அவர் தம் அறிவுரையை சிந்தித்தலும் ஆகும் .
2.இலிங் வழிப்பாடுசிவபெருமானுடைய அருவுருவமாகிய சிவலிங்கத்தைவழிபடுதலாகும் .
3.சங்கம வழிப்பாடுசிவனடியார்களை சிவமாகவே கருதி வணங்கி வழிப்படுதல்.
13.தீக்கை என்றால் என்ன ?
சைவகுருமார்களால் ஏனையோர்க்கு அளிக்கப் பெறும் சைவ சமய அங்கீகாரச் சடங்கே தீக்கை ஆகும் .
14. .தீக்கை எத்தனை வகைப்படும் ?’
சமயதீக்கை ,விசேசதீக்கை ,நிர்வாணதீக்கை ,ஆச்சார்யதீக்கை என நான்கு வகைப்படும்.
15.சைவ சமயத்தின் சிறந்த நூல்கள் யாவை?
தோத்திரமும் , சாத்திரமும் சைவத்தின் இரு கண்கள் போன்றது .
16. தோத்திரம் என்றால் என்ன ?
சிவபெருமானின் புகழைப் போற்றித்துதித்து நாயன்மார்களும் அடியார்களும் பாடியுள்ள பாடலகள் தோத்திரம் அல்லது திருமுறைகள் எனப்படும் .
17. திருமுறைகள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை?
திருமுறைகள் பன்னிரன்டு வகைப்படும் , அவை முதலாம் திருமுறைமுதல் பன்னிரன்டாம் திருமுறைவரை பெயர் சொல்லி வ.ழங்கப்படும் .
18.திருஞானசம்பந்தர் அருளிச் செய்தவை எத்தனை திருமுறைகள் ?
முதல் மூன்று திருமுறைகள்.
திருஞானசம்பந்தர்

19.திருநாவுக்கரசர் அருளிச் செய்தவை எத்தனை திருமுறைகள் ?
நான்கு , ஐந்து , ஆறாம் திருமுறைகள்.
திருநாவுக்கரசர்

20.சுந்தரர் அருளிச் செய்தவை எத்தனை திருமுறைகள் ?
ஏழாம் திருமுறைஆகும் .
சுந்தரர்

21.எட்டாம் திருமுறை யாவது யாது ?
திருவாசகமும் , திருக்கோவையாரும் அருளியவர் மாணிக்கவாசகர் .
மாணிக்கவாசகர்

22.திருவாசகத்தின் பெருமை என்ன ?
மாணிகவாசகர் அருள சிவபெருமான் அதனைத்தன் திருக்கரங்களினால் எழதிக் கையொப்பமிட்டுவைத்தவை திருவாசகப்பாடல்கள் .
23.ஒன்பதாம் திருமுறை எதைக் குறிக்கும் ?
திருவிசைப்பா , திருப்பல்லாண்டைக்குறிக்கும் .
24. ஒன்பதாம் திருமுறை ஆசிரியர்கள் யாவர் ?
திருமாளிகைத்தேவர் , சேர்ந்தனார் , கருவூர்தேவர் , பூந்துருத்திகாடவநம்பி , கண்டராதித்தர் ,வேணாட்டிகள் , திருவாலிஅமுதனார் , புருடோத்தமநம்பி ,சேதிராயர் ஆகிய ஒன்பதின்மர் .
 
25. பத்தாம் திருமுறை யாவது யாது ?
திருமூலர் அருளிச் செய்துள்ள திருமந்திரம் .
26. பதினோராம் திருமுறையாவது யாது ?
சைவ சமயப் பிரபந்தத்திரட்டு என இருபத்திரண்டு வகைசிற்றிலக்கியங்களால் ஆனது .
27. பதினோராம் திருமுறையின் ஆசிரியர்கள் யாவர் ?
திருவாலவாயுடையார் , காரைகாலம்மையார் , ஐயடிகள் காடவர்கோன் , சேரமான் பெருமான்நாயன்னார் , நக்கீரதேவர் , கல்லாடதேவர் , கபிலதேவர் , பரணதேவர் , இளம் பெருமானடிகள் , அதிராவடிகள் , பட்டினத்து அடிகள் , நம்பியாண்டார்நம்பிகள் .
காரைகாலம்மையார்

சேரமான் பெருமான்நாயன்னார்

28.பதினோரம் திருமுறையின் சிறப்பு என்ன ?
தமிழ்சங்கத் தலைமைப் புலவரான சோமசுந்தரக்கடவுள் பாணபத்திரக்காக சேரமன்னுக்கு வரைந்த திருமுகப்பாசுரம் இடம் பெற்றுள்ளது , திருமறைகள் பாடியவர்களில்ஒரேபெண்புலவரான காரைக்கால் அம்மையாரின் பதிகங்களைப் பெற்றது .
29.பன்னிரண்டாம் திருமுறையாவது யாது ? அதை பாடியவர் யார் ?
பன்னிரண்டாம் திருமுறைபெரியபுராணம்ஆகும் . இதை பாடியவர் சேக்கிழார் .
சேக்கிழார்

30.சாத்திரங்கள் என்றால் என்ன ? அவை எத்தனை ?
சைவ சித்தாந்த முப்பெரும் உண்மைகளை கூறும் நூல்கள் சாத்திரங்களாகும் அவை பதிநான்கு .
31. பதிநான்கு . சாத்திர நூல்கள் எவை ? அதன் ஆசிரியர் யார் யார் ?
1.திருவுந்தியார்திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் .
2.திருக்களிற்றுப்பாடியார்திருகடவூர் உய்யவந்த தேவநாயனார் .
3.ஞானபோதம்மெய்கண்டார் .
4.சிவஞானசித்தியார்அருணந்தி சிவாச்சாரியார் .
5.இருபாஇருபது - அருணந்தி சிவாச்சாரியார் .
6.உண்மை விளக்கம்திருவதிகைமனவாசகம்கடந்தார்.
7.சிவப்பிரகாசம் - உமாபதிசிவம்
8.திருவருட்பயன் - உமாபதிசிவம்
9.வினாவெண்பா - உமாபதிசிவம்
10.போற்றிப்பஃறொடை - உமாபதிசிவம்
11.கொடிக்கவி - உமாபதிசிவம்
12.நெஞ்சுவிடுதூது - உமாபதிசிவம்
13.உண்மை நெறி விளக்கம் - உமாபதிசிவம்
14.சங்கற்ப நிராகரணம் உமாபதிசிவம்
32.சைவசமயத்தில் சிறந்து விளங்கிய அருளாளர்கள் யாவர் ?
அறுபத்து மூன்று நாயன்மார்களும் சைவத்தில் சிறந்த அருளாளர்களாக விளங்கினார்கள் .

தொகுக்க உதவிய நூல்கள் : சைவ சமயக்கலைக்களஞ்சியம், சைவசமய தோத்திர வினாவிடை , முனைவர் சிவ. திருச்சிற்றம்பலம்
சைவ சமயக்கல்வி - தருமபுர ஆதீனம்,
சைவ சமய வரலாறும் பன்னிரு திருமுறை வரலாறும் - திரு. கு. வைத்தியநாதன்

No comments:

Post a Comment